நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்
நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர்வழங்கல்
மின்னஞ்சல் : minister_mard[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 044-25675370
Dr D. கார்த்திகேயன், இ.ஆ.ப.,
அரசு முதன்மை செயலாளர்
மின்னஞ்சல் : mawssec@tn.gov.in
தொலைபேசி : 25670491
தமிழ்நாட்டில் 48.45 சதவீதம் மக்கள் நகர்ப்புரங்களில் வாழ்வதால் தமிழ்நாடு மிகுந்த நகர்மயமான மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் 7.21 கோடி மக்கள் தொகையில் 3.50 கோடி மக்கள் தற்போது நகர்ப்புரங்களில் வசிக்கின்றனர். தமிழ்நாடு அடுத்த இரு பத்தாண்டுகளில் நகர்மயமாதலில் முன்னிற்கும். வேகமான நகர்மயமாக்கல் பெரும் பொருளாதாரத் தேவைகளையும், அதே சமயம் பெரும் வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பொருளாதார ரீதியான வாய்ப்புகள் சென்றடைய நகர்ப்புர பகுதிகளில் நிலையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் அவசியமாகும்.
மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவதும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கடமையாகும்.
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள், உள்ளாட்சிகளை ஆளும் திறன் கொண்ட தன்னிறைவு பெற்ற நிறுவனங்களாக மேம்படுத்துவதே இவ்வரசின் நோக்கமாகும். நகர்ப்புர ஆளுமையை நன்கு வழிநடத்த சிறந்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தேவை என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது. இதற்காக நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மிகச் சிறந்ததாக ஆக்குவதற்கு இவ்வமைப்பில் செயல்படுவோரின் திறன் மேம்பாட்டினை உயர்த்தும் நடவடிக்கைகளை இவ்வரசு செம்மைப்படுத்தி வலுப்படுத்தும்.
நகர்ப்புர வசிப்பிடங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தி மக்கள் சிறப்பாக வாழ தகுதியான சூழ்நிலையை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புர வறுமையானது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அரசு தற்போது பல்வேறு கொள்கைகளை வகுத்து மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் மேற்கொள்வது உட்பட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம், சாலை மேம்பாட்டு பணிகள், பேருந்து நிலையங்கள், குடிநீர் வசதிகள், குடிசை வீடுகளை மேம்படுத்துதல் மற்றும் நகர்ப்புர ஏழைகளுக்கு குடியிருப்புகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை உலக வங்கி உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்-III, மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிதியம் மற்றும் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி போன்ற வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் 9 மாநகராட்சிகள் மற்றும் 12 மூன்றாம் நிலை நகராட்சிகள் உட்பட 150 நகராட்சிகளும் உள்ளன. நகராட்சிகளின் நிலை ஆண்டு வருவாய் / மக்கட் தொகை அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.